மும்பை: மும்பையில் தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் பேசியதாவது: நாடு முழுவதும் கடந்த ஆண்டு 274 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் மக்களுக்கு நேரடி மானியம் அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. இருப்பினும், இதை சமாளிக்கும் வகையில் கூடுதல் காப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா பரவல் இருந்தாலும், முந்தைய ஆண்டை போல ஊரடங்கு இருக்கும் என எதிர்பார்க்க தேவையில்லை.
வரும் 2021-22 நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்துள்ளது. மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே கிரிப்டோ கரன்சி தொடர்பாக எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. இருப்பினும், கிரிப்டோ கரன்சி தொடர்பான கவலை அளிக்கக்கூடிய சில விஷயங்களை அரசுக்கு தெரிவித்துள்ளோம். இதுதொடர்பாக அரசு ஒரு முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக அரசுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ரூபாய் மதிப்பை நிலையாக வைத்திருக்க முயற்சிசெய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.